நற்றிணை - 38. நெய்தல்
வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப, பாட்டம் பொய்யாது பரதவர் பகர, இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும் ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப் |
5 |
புலம்பு ஆகின்றே- தோழி! கலங்கு நீர்க் கழி சூழ் படப்பைக் காண்டவாயில், ஒலி காவோலை முள் மிடை வேலி, பெண்ணை இவரும் ஆங்கண் வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே. |
10 |
தோழீ ! கலங்கிய நீரையுடைய கடற்கழி சூழ்ந்த தோட்டங்களையுடைய 'காண்ட வாயில்'என்னும் ஊரிலுள்ள; தழைந்த முற்றிய பனையோலையோடு முட்களைச் சேர்த்துக் கட்டப்பட்ட வேலியகத்து; பனைமரங்கள் உயர்ந்த பெரிய மணல்மேட்டினையுடைய பக்கஞ் சூழ்ந்த ஒலிமிக்க எம்மூரானது; கடலிடத்து மீன்வேட்டைமேற் சென்றார்க்கு ஆங்குத் தப்பாது பெறவேண்டி மழைபொய்யாது பெய்தலானே வலைவளம் சிறப்ப; அவ்வலை வளத்தால் வந்தபொருளைப் பிற நாட்டிற்சென்று பரதமாக்கள் விலைக்குவிற்றுவர, இரும்பனந் தீம்பிழி யுண்போர் மகிழும் அப்பொருளை ஈந்து கரிய பனையின் இனிய கள்ளைப் பெற்றுண்பவராய் மகிழ்ந்திருக்கும், ஆர் கலி யாணர்த்து ஆயினும் நிரம்பிய ஒலியையுடைய புதுவருவாயினையுடைய தாயினும்; தொகுதி விளங்கிய நமது மெல்லிய கடற் சேர்ப்பன் நம்மைவிட்டுப் பிரிந்தகாலத்தில் நம்மூரானது பொலிவழிந்தாற் போல வருத்தமுடையதா யிராநின்றது; ஆதலின் யான் எங்ஙனம் வருந்தாது ஆற்றியிருப்பேன் ?;
தலைவி வன்புறை எதிர்அழிந்து சொல்லியது. - உலோச்சனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 38. நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, நெய்தல், சூழ்ந்த, மகிழும், சங்க, எட்டுத்தொகை, பொய்யாது