நற்றிணை - 350. மருதம்
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ, பழனப் பல் புள் இரிய, கழனி வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும் தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என் தொல் கவின் தொலையினும் தொலைக! சார |
5 |
விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக் கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை சாடிய சாந்தினை; வாடிய கோதையை; ஆசு இல் கலம் தழீஇயற்று; வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே! |
10 |
வெள்ளிய நெற்கதிரை அறுக்கும் மள்ளர் முழங்குகின்ற தண்ணுமைக்கு அஞ்சி வயலிலுள்ள பலவாகிய புள்ளினமெல்லாம் இரிந்தோடிச் செறிதலால்; வயலின்மீது தாழ்ந்து வளைந்த கிளையையுடைய மருதமரத்தே தூங்குகின்ற பூங்கொத்துகள் உதிராநிற்கும்; இரவலர்க்குத் தேர் கொடுக்கும் வண்மையுடைய (விராஅன்) என்னும் கொடைவள்ளலின் 'இருப்பையூர்' போன்ற; எனது பழைய அழகெல்லாம் கெடுவதாயினுங் கெடுக; என்னருகில் நீ நெருங்குமாறு விடுவேனல்லேன் அங்ஙனம் விடுகிற்பேனாயின்; என்வாயினால் நின்னை விலக்கப்பட்டும் என் அகத்திடுகைகள் நின்னை வல்லே அணைத்து முயங்காநிற்கும்; நீதானும் வலிமையுடைய குவிந்த பரத்தையின் கொங்கையினாலே சாடப்பட்ட சந்தனத்தையுடைய அவள் குழைய முயங்கலாலே துவண்டு வாடிய மாலையையுடையை; ஆதலால் நின்னைத் தீண்டுதல் கலங்கழித் தெறிந்த தாழி முதலியவற்றைத் தீண்டிய அத்தன்மையதாகும்; அதனால் என் மனையின்கண்ணே வாராதே கொள்; நின்னை அணைத்து முயங்கி அப் பரத்தை நின்னொடு நெடுங்காலம் வாழ்வாளாக!
தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 350. மருதம், இலக்கியங்கள், நற்றிணை, மருதம், நின்னை, அணைத்து, வாடிய, தேர், எட்டுத்தொகை, சங்க, விராஅன்