நற்றிணை - 330. மருதம்
தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து, மட நடை நாரைப் பல் இனம் இரிய, நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து, நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் |
5 |
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம் புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும், பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, நன்றி சான்ற கற்பொடு |
10 |
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே. |
வளைந்த கொம்பையும் வலிமை பெற்று விளங்கிய பிடரியையும் உடைய கரிய எருமைக்கடா; இள நடையையுடைய பலவாகிய நாரையின் கூட்டம் எல்லாம் இரிந்தோடும்படியாக; நெடிய நீர் நிரம்பிய தண்ணென்ற பொய்கையிலே 'துடும்' என்னும் ஒலியுண்டாம்படி தான் காலையில் உழுத தொழிலின் வருத்தம் நீங்குமாறு பாய்ந்துகிடந்து; தன்னுடம்பின் அயா நீங்கிய பின்னர் நீண்ட கிளைகளையுடைய இருள் நிரம்பிய மருதமரத்தின் இனிய நிழலின் கண்ணே தங்கியிருக்கும்; புது வருவாயினையுடைய ஊரனே!; நின்னுடைய மாட்சிமை பொருந்திய கலன் அணிந்த பரத்தை மகளிரை எமது மனையின்கண் அழைத்துவந்து; நீ குலமகளிரைப் போலக் கருதி மணந்து தழுவியிருந்தாலும்; அவருடைய புல்லிய மனத்திலே கரவில்லாதபடி மெய்ம்மை தோன்றுதல் அரிதேயாகும்; அவரும் பசிய வளையணிந்த புதல்வியரையும் புதல்வரையும் ஈன்று; நன்மையமைந்த கற்புடனே எம் பக்கத்து அமர்தலும்; அதனினுங் காட்டில் அரிய தொன்றாகும்; அங்ஙனமாதலை நீ அறிந்தாய் அல்லை போலும்;
தோழி, தலைமகனை வாயில் மறுத்தது. - ஆலங்குடி வங்கனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 330. மருதம், இலக்கியங்கள், மருதம், நற்றிணை, அரிதே, அவரும், நிரம்பிய, மகளிரை, வருத்தம், எட்டுத்தொகை, சங்க, இருள்