நற்றிணை - 328. குறிஞ்சி
கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி, சிற்சில வித்திப் பற்பல விளைந்து, தினை கிளி கடியும் பெருங் கல் நாடன் பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால், அது இனி வாழி- தோழி!- ஒரு நாள், |
5 |
சிறு பல் கருவித்து ஆகி, வலன் ஏர்பு, பெரும் பெயல் தலைக, புனனே!- இனியே, எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல், விலங்கு மலை அடுக்கத்தானும், |
10 |
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே. |
தோழீ! கிழங்குகள் கீழிறங்கித் தேனடைகள் மிகுதியாக மேலே வைக்கப்பட்டு; மிகச் சிலவாய தினைகளை விதைத்து அவை மிகப் பலவாக விளைதலும்; அவற்றைக் கிளி கொய்து போகாதபடி ஓப்பிப் பாதுகாக்கும் பெரிய மலை நாடனுடைய; பிறப்பு மிக உயர்வுடையதேயன்றி நம்மோடு ஒத்த ஒரு தன்மையதன்றென்பதை அறிந்தனம்; அதனால் அப் பிறப்பு இனி என்றும் வாழ்வதாக! அத்தகைய உயர்பிறப்பினனாதலின் அவன் கூறியது பிறழான்காண்; முதன் மழை பெய்தவுடன் வருவேன் என்றனன் ஆதலின், இனி எள்ளைப் பிழிந்தெடுக்கும்நெய்யையும் வெளிய கிழியையும் விரும்பிப் பெறாது; சந்தனமரம் மிகுதியாகவுடைய உயர்ந்த பெரிய மலைச்சாரலிலே குறுக்கிட்ட மலையின் புறத்திருக்கும் பக்கமலையிடத்து; நன்கலம் பெற்ற விறலி கூத்தயரா நிற்கும் இவ் வூரிலுள்ள நம்முடைய தினைப் புனத்தில்; அந்த மேகம் சிறிய பலவாய மின்னல் முதலாய தொகுதிகளையுடையதாகி வலமாக எழுந்து பெரும் பெயலை ஒருநாள் பொழிந்து விடுவதாக; பெய்த அன்றே வருகுவனாதலின் நீ வருந்தாதே கொள்!
தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை வற்புறுத்தது. - தொல் கபிலர் >
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 328. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, பிறப்பு, நற்றிணை, பெரும், விறலி, பெரிய, தோழி, அறிந்தனம், எட்டுத்தொகை, கிளி, சங்க, அதனால்