நற்றிணை - 255. குறிஞ்சி
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே; உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி, கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்; வயக் களிறு பொருத வாள் வரி உழுவை கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!- |
5 |
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர் வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல- உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப் பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள், திருமணி அரவுத் தேர்ந்து உழல, |
10 |
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே! |
பேயினங்கள் விளக்கமுற இயங்காநிற்ப, இவ் விராப்பொழுதெல்லாம் ஊர்முழுதுந் துயில் கொள்ளாநின்றது; கேட்போர் அச்சம் பொருந்துதற்குரிய தன்மையுடனே குறிஞ்சியென்னும் பண்ணைப் பாடிக்கொண்டு அகன்ற இவ்வூரைக் காத்தலையுடைய கானவர் யாரும் துயில்வாரல்லர்; வலிய களிற்றியானையொடு பொருத வாள்போலுங் கோடுகளையுடைய புலி துறுகல் மிக்க மலையடியினின்று முழங்கா நிற்கும்; ஐயோ! ஓங்கிய மலைவழியில் உயர்ந்த மலைப்பக்கத்தில் விளங்கி மின்னி மழை பெய்தலை மயங்கி நிற்கின்ற காலம் நீட்டித்த இரவு நடுயாமத்து; பாம்பு தன்செவியிற் படுதலும் தன்னிடத்துள்ள அழகிய நீலமணியைக் கக்கி வருந்தி உழலுமாறு சினங்கொண்டு இடி முழங்கி மோதாநிற்கும்; இப்பொழுது மெல்லிய தோள் தளர்வுற்று நாம் வருந்துவதாயினும் அவர் இங்கு வாராராயிருத்தலே மிக நல்லதாகும்;
ஆறு பார்த்து உற்றது. - ஆலம்பேரி சாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 255. குறிஞ்சி, குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, நாம், அவர், தோள், கானவர், சங்க, எட்டுத்தொகை, பொருத