நற்றிணை - 252. பாலை
'உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி, சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம், திறம் புரி கொள்கையொடு இறந்து செயின அல்லது, அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்' என, வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த |
5 |
வினை இடை விலங்கல போலும்- புனை சுவர்ப் பாவை அன்ன பழிதீர் காட்சி, ஐது ஏய்ந்து அகன்ற அல்குல், மை கூர்ந்து மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய் |
10 |
நல் நாப் புரையும் சீறடி, பொம்மல் ஓதி, புனைஇழை குணனே! |
சுவரில் அலங்கரித்து எழுதிய பிரதிமை போன்ற குற்றந்தீர்ந்த காட்சியையும் மெல்லியதாய்ப் பொருந்தியகன்ற அல்குலையும்; மையெழுதப்பட்டு நீலமலரை எதிரிட்டுப் பிணைத்தாற் போன்ற கரிய இமைகளையுடைய குளிர்ச்சியுற்ற கண்ணையும்; முயலைப் பிடிக்க வெழுந்த விரைந்த செலவும் சினமுமுடைய நாயினது நல்ல நாவினை யொத்த சிறிய அடிகளையும்; செறிந்த கூந்தலையும் புனைந்த கலன்களையுமுடைய இவளுடைய குணங்கள்; கிளைகளையுடைய ஓமை மரத்தின் பட்டகிளைகளுள் மறைந்து தங்கிச் சிள்வீடு ஒலியாநிற்கும் வேற்றுநாட்டின்கண்ணே; செல்லுகின்ற நெறியில் இன்னவாறு செல்வோமென்னுங் கோட்பாட்டினோடு சென்றிருந்து பொருள் சேர்த்தாலல்லாமல்; வீட்டின்கண் கவலையுடன் மனமடிந்து இருந்தவர்க்கு அரிய பொருளின் சேர்க்கை ஒருபொழுதும் சேர்வதில்லை யென்று; இதுவரையிலும் உடன்பட்டெழாத நெஞ்சம் ஒருப்படுதலால்; தலைவர் ஆராய்ந்து தொடங்கிய காரியத்தின்கண்ணே குறுக்கிட்டுத் தடுத்தல் செய்தில போலும்; ஆதலின் ஆற்றியிருக்கற்பால தன்றி வேறு செய்யக்கடவது யாதுமில்லை;
'பொருள்வயிற் பிரியும்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. - அம்மெய்யன் நாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 252. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, போலும், நெஞ்சம், சங்க, எட்டுத்தொகை, சிள்வீடு