நற்றிணை - 250. மருதம்
நகுகம் வாராய்- பாண!- பகுவாய் அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன் பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன் |
5 |
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக, பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து, வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, 'யாரையோ?' என்று இகந்து நின்றதுவே! |
10 |
பாணணே! எமது அருகில் வருவாயாக !; பகுத்த வாய் வழியாலே உள்ளே பரலிடப்பட்ட கிண்கிணி யொலிப்ப; தெருவிலே முக்காற் சிறுதேரைப் பற்றிக் கொண்டு நடைபயிலுகின்ற இனிய மொழியையுடைய புதல்வனை; எம் மார்போடு அணைத்தலும் அவனது செவ்வாம்பல் மலர் போலத் தோன்றுஞ் சிவந்த வாய் நீர் ஒழுகுதலாலே சிதைந்த சந்தனப் பூச்சோடு விருப்பம் வரும் எம்முள்ளம் எம்மைச் செலுத்த யாம் எம் காதலியை முயங்க வேண்டிய விருப்பத்துடனே அருகில் சென்றேமாக; அங்ஙனஞ் சென்றவுடன் பிறைத்திங்களைப் போன்ற அழகு பொருந்திய மாசற்ற சிறப்புடைய நெற்றியையும் மணங்கமழும் கரிய கூந்தலையும் உடைய அவள் தன் உள்ளத்து வேறாகக் கருதி; பிணைமான் போல வெருண்டு எம்மை நீங்கி அயலே சென்று நின்று; "நீ என்னருகில் வருதற்கு யாவனாந்தன்மையையுடையை" என்று இகந்து நின்றதை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலானே நாம் இருவேமும் நகா நிற்பம்!
புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது. - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 250. மருதம், இலக்கியங்கள், வாய், நற்றிணை, மருதம், யாம், இகந்து, அருகில், கிண்கிணி, எட்டுத்தொகை, சங்க, நாறு