நற்றிணை - 225. குறிஞ்சி
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப் பொருத யானை வெண் கோடு கடுப்ப, வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை, மெல் இயல் மகளிர் ஓதி அன்ன பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை |
5 |
இரந்தோர் உளர்கொல்- தோழி!- திருந்து இழைத் தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப் பயந்து எழு பருவரல் தீர, நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே? |
தோழீ! திருத்தமாகச் செய்த கலன் அணிந்த தொய்யிற் குழம்பால் எழுதப்பட்ட வனமுலையின்கணுள்ள இரேகையின் அழகு கெடும்படி பசந்து தோன்றிய துன்பந்தீருமாறு; முருகவேளையொத்த வலியொடு கடுஞ்சினம் மிகுத்துப் போர்செய்த யானையின் குருதி படிந்த வெளிய தந்தம் போல; வாழை அப்பொழுது ஈன்ற தாற்றின் கூர்மை பொருந்திய கொழுத்த முகை ; மெல்லிய சாயலையுடைய மகளிரது கூந்தலை முடித்துப்போட்டாற் போன்ற அதன் பூவொடு அசையாநிற்கும்; பெரிய மலை நாடன்பாற் சென்று விரும்பின எமக்கு உதவாத அன்பற்ற அவனது மார்பை நம்மில் இரந்து கேட்டவர் உளரோ? அவனே வந்து தலையளி செய்து இப்பொழுது கைவிட்டொழிந்தனன் கண்டாய்!
வன்புறை எதிர் அழிந்தது; பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 225. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, முகை, பூவொடு, ஈன்ற, வாழை, எட்டுத்தொகை, சங்க