நற்றிணை - 205. பாலை
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப் பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும் துன் அருங் கானம் என்னாய், நீயே |
5 |
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய, ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடு போயின்றுகொல்லோ தானே- படப்பைக் கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் நீர் மலி கதழ் பெயல் தலைஇய |
10 |
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே! |
நெஞ்சே! அருவி ஒலிக்கின்ற பெரிய மலைப்பக்கத்தில் நல்ல ஆளி என்னும் விலங்கு; இரை விரும்பி எழுந்த கொல்ல வல்ல நகங்களையும் அழகிய வரியையுமுடைய புலியாலடிக்கப்ட்ட; கூரிய நுனியையுடைய தலையிலே தாங்கிய வெளிய கோட்டினையுடைய வலிய களிற்றியானையை இரையாகக் கொண்டு இழுத்துச் செல்லாநிற்கும்; பிறர் நெருங்குதற்கரிய காடென்று நினையாய்; நீ தான் குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய இவள் இவ்விடததே நிற்குமாறு கைவிட்டு நின்னுள்ளத்து முயற்சியை மேற்கொண்டு வினையிடத்துச் செல்லுவையாயின; கொல்லையிலுள்ள வளைந்த முள்ளையுடைய இண்டின் நெடிய கரிய அழகிய தளிரின்மீது நீர்மிக்க விரைவையுடைய மழை பெய்துவிட்ட பொழுதுண்டான அழகிய நிறம் போன்ற இவளது மாமையினழகு; இன்றோடே போயிற்றுக்காண்; ஆதலின் ஆராய்ந்து நினக்கு ஏற்றது செய்வாயாக!
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது. தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம். - இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 205. பாலை, இலக்கியங்கள், பாலை, இவள், அழகிய, நற்றிணை, நிறம், செலவு, அருவி, எட்டுத்தொகை, சங்க, குவளை