நற்றிணை - 194. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி! கைம்மாறு யாது செய்வாங்கொல் நாமே- கய வாய்க் கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும், வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை, அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத் |
5 |
தனி நிலை இதணம் புலம்பப் போகி, மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை, குன்ற வெற்பனொடு நாம் விளையாட, இரும்பு கவர்கொண்ட ஏனற் பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே? |
10 |
தோழீ! வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேள்; மலைமேலே சமைத்த தனியாக நிலைபெற்ற கட்டுப் பரண் வறிதாம்படி விடுத்துச் சென்று; மரமேறுந் தொழிலிலே சிறப்புடைய மந்திகளும் ஒன்றோடொன்று செறிந்திருப்பதால் ஏறியறியாத மரங்கள் நெருங்கிய ஓரிடத்திலே; குன்றுகளையுடைய மலைகிழவனுடன் நாம் முயங்கி விளையாட்டயராநிற்கவும்; அப்பொழுது மிக விருப்பங்கொண்ட புனத்திலுள்ள தினையின பெரிய கதிர்களைத் தின்றழித்துவிடாத; பெரிய வாயையுடைய கன்றினை, மருங்கிலுடைய பிடியானையோடு புணர்ந்து இயங்குகின்ற வலிமை மிக்க மருப்பினையும் நிலத்தின் கண் ஈர்த்தலையுடைய நெடிய துதிக்கையையும் பெருமையையுமுடைய களிற்றியானைக்கு; நாம் யாது கைம்மாறு செய்யக்கடவாநிற்போம்?; அன்றியும் மிக விருப்பங்கொண்ட பெரிய தினைக் கதிரைக்கொண்டு போகாதொழிந்த சிறிய பசிய கிள்ளைக்கு; யாது கைம்மாறு செய்யக் கடவா நிற்போம்; இப்பொழுது நம்மை இல்வயின் செறித்தலானே அவை புனம் புகுந்து அழிக்கலாயின;
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை மருதன் இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 194. குறிஞ்சி, இலக்கியங்கள், யாது, நாம், பெரிய, குறிஞ்சி, கைம்மாறு, நற்றிணை, விருப்பங்கொண்ட, எட்டுத்தொகை, அன்றியும், புணர்ந்து, சங்க