நற்றிணை - 190. குறிஞ்சி
நோ, இனி; வாழிய- நெஞ்சே! மேவார் ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த் திதலை எஃகின் சேந்தன் தந்தை, தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி, வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் |
5 |
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய, வலை மான் மழைக் கண், குறுமகள் சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே! |
நெஞ்சமே! பகைவருடைய புகுதற்கரிய அரணங்களை வென்றுகொண்ட மாரி போல்கின்ற கைவண்மையையும் கள்ளுணவையும் திதலை பரந்த வேற்படையையுமுடைய சேந்தன் என்பானுக்கு; தந்தையாகிய தேன்மணங் கமழும் விரிந்த மாலையையுடைய அழகிய தேரினையுடைய அழிசி என்பவனது; நெற்கதிர்களினிடையே வண்டு மூசுகின்ற நெய்தலின் மலர்கின்ற பூவினின்று; தேன் வடிதலையுடைய வயல் சூழ்ந்த "ஆர்க்காடு" என்னும் ஊரையொத்த; விருப்பம் வருகின்ற பருத்த தோளினழகோடு பெருமையடைந்த வலையிலகப்பட்ட மானினது கண்போன்ற மருண்ட குளிர்ச்சியையுடைய கண்களையுடைய இளமையளாகிய தலைவியின்; சிலவாய் மொழியையுடைய சிவந்த வாயினின்றெழுகின்ற நகைக்கு மகிழ்ந்தோய்; அங்ஙனம் மகிழ்ந்ததனாலே பின்பு கிடைக்கப் பெறாயாய் இனி நீ துன்புறுவாய் காண்; அவ்வகையாகிய துன்பத்துடனே நெடுங்காலம் வாழ்வாயாக;
பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது; அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்; இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 190. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, ஆர்க்காடு, நலம், நகைக்கு, நெஞ்சிற்குச், வண்டு, திதலை, எட்டுத்தொகை, சங்க, மாரி, சேந்தன், அழிசி