நற்றிணை - 17. குறிஞ்சி
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து, மால் கடல் திரையின் இழிதரும் அருவி அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி, தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை, |
5 |
'எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு' என, மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து, உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து, உரைத்தல் உய்ந்தனனே- தோழி!- சாரல், காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி |
10 |
தீம் தொடை நரம்பின் இமிரும் வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே. |
தோழீ ! விடியற்காலையில் மழைபெய்துவிட்ட நல்ல நெடிய மலையினின்று; கரிய கடலின் அலைபோல இழிகின்ற அருவி; அகன்ற பெரிய காட்டினிடத்துச் சென்று தங்கியோடும் அழகை நோக்கி; அஃது அவரை எதிர்ப்பட்ட இடமாதலின் அடக்கவும் தகைக்கு மளவின் நில்லாமல் பெரிய அழகினையுடைய குளிர்ந்த கண்கள் நீரைப் பெருக்கி அழுதலானே; அதனைக் கண்ட அன்னை என்னை நோக்கி நீ ஏன் அழுதலைச் செய்கின்றனையோ ? அழாதே கொள்! நின் விளங்கிய எயிற்றினை முத்தங் கொள்வனென்று; மென்மையாகிய இனிய மொழிகளைக் கூறுதலானே; யான் விரைந்து உயிரினுங் காட்டிற் சிறந்த நாணினையும் மிக மறந்துவிட்டு; சாரலின்கணுள்ள காந்தளின் தேனையுண்ட நீலமணிபோலும் நிறத்தையுடைய வண்டு யாழிற் கட்டிய இனிய நரம்பு ஒலித்தல்போல ஒலிக்கா நிற்கும் விசும்பி லோங்கிய வெற்பினையுடைய தலைவனது மார்பைப் பிரிந்தமையால் வந்த வருத்தத்திற்கு அழா நின்றேன் என்று; கூறத் தொடங்கி அப்பால் நினைவுவரத் தவிர்ந்துய்ந்தேன்;
முன்னிலைப் புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - நொச்சிநியமங்கிழார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 17. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, இனிய, நோக்கி, நற்றிணை, விரைந்து, பெரிய, சிறந்த, நின், அருவி, எட்டுத்தொகை, அன்னை, சங்க