நற்றிணை - 166. பாலை
பொன்னும் மணியும் போலும், யாழ நின் நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்; போதும் பணையும் போலும், யாழ நின் மாதர் உண்கணும் வனப்பின் தோளும்: இவை காண்தோறும் அகம் மலிந்து, யானும் |
5 |
அறம் நிலைபெற்றோர் அனையேன்; அதன்தலை, பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்; வினையும் வேறு புலத்து இலெனே; நினையின், யாதனின் பிரிகோ?- மடந்தை!- காதல் தானும் கடலினும் பெரிதே! |
10 |
மடந்தாய்! பொன்னைப் போலும் ஒளிவீசுகின்ற நினது நல்ல வடிவும், நீலமணியைப் போலும் (நிறமமைந்த) மணங்கமழ்கின்ற நின் கரிய கூந்தலும்; குவளை மலரைப் போலும் அழகிய மையுண்ட நின்கண்களும்; மூங்கிற் போத்தினைப்போலும் அழகையுடைய நின் தோள்களும்; ஆகிய இவற்றைக் காணும் பொழுதெல்லாம் யானும் உள்ளம் மகிழ்ந்து அறத்தின்கண்ணே நிலைபெற்றோர் அடையும் பயனை அடைந்தேன் ஆகின்றேன்; அதன்மேலும் பொன்னாலாகிய தொடியணிந்த புதல்வனும் விளையாட்டயர்தல் கற்றிருக்கின்றனன்; நுங்களைக் கண்டு மகிழ்வதினுங் காட்டிற் சிறந்ததொன்றும் இல்லாமையால் வேற்றிடஞ் சென்று செய்யும் செயல் யாதுமில்லாதேனாகியிராநின்றேன்; நின்பால் எனக்குண்டாகிய ஆசையோ கடலினும் பெரிதாயிராநின்றது; இவற்றை ஆராயின் எக்காரணத்தை முன்னிட்டு நாம் ஒருவரையொருவர் பிரிகிற்பம்; பிரியகில்லமாதலின் நீ வேறுபட்டுக் காட்டி என்னை வருத்தாதே கொள்!;
செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 166. பாலை, போலும், இலக்கியங்கள், நின், நற்றிணை, பாலை, புதல்வனும், கடலினும், நிலைபெற்றோர், யானும், எட்டுத்தொகை, சங்க