நற்றிணை - 159. நெய்தல்
மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின் உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை, நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை, கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி, எல்லை கழிப்பினம்ஆயின், மெல்ல |
5 |
வளி சீத்து வரித்த புன்னை முன்றில், கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய, 'எழு' எனின், அவளும் ஒல்லாள்; யாமும், 'ஒழி' என அல்லம் ஆயினம்; யாமத்து, உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற் |
10 |
சில் குடிப் பாக்கம் கல்லென அல்குவதாக, நீ அமர்ந்த தேரே! |
நீலமணி களங்கமறத் தௌ¤ந்திருந்தாற்போன்ற கரிய பெரிய கடனீர்ப் பரப்பின் வலிய அலையோங்கி மோதுகின்ற; புன்னை மலர் மிக்க பெரிய துறையின் கண்ணே நிலவைக் குவித்து வைத்தாற் போன்ற உயர்ச்சியையுடைய மணன்மேடு இடிந்து சரிந்த கரையின்கண்ணே நின்று; சங்குகளைக் குலையாகத் தொடுத்தாற் போன்ற குருகுகளின் வரிசையை எண்ணிப் பகற்பொழுதை நின்னொடு போக்குவேமாயின்; மெல்லக் காற்றடித்துப் பெருக்கிக் கோலஞ் செய்த புன்னைமரம் பொருந்திய வாயிலையுடைய; கொழுவிய மீனுணவையுடைய வளப்பமிக்க மனையத்துச் செல்லும்பொருட்டு நீ எழுந்துவருவாயாக! என்றால்; அதற்கு அவள் உடன்படுவாளல்லள்; யாமும் அத்தலைவியை நோக்கி நீ கொண்ட உள்ளக் கருத்தை ஒழிப்பாயாக! என்று கூறும் தகுதிப்பாடுடையேமல்லேம்; சேர்ப்பனே! நடுயாமத்து முரிந்து விழுகின்ற அலையின் ஒலியைக் கேட்டும் துயிலாநின்ற நிரம்பிய கடற்கரையின் கண்ணதாகிய சிலவாகிய குடியிருப்புக்களையுடைய எம்மூரில்; யாவரும் எதிர்கொள்ளும் மகிழ்ச்சியாலே கல்லென்னும் ஒலியுண்டாம்படி நீ விரும்பிய தேர் தங்குவதாக!
தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி, வரைவு கடாயது. - கண்ணம்புல்லனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 159. நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, நெய்தல், யாமும், பெரிய, புன்னை, பரப்பின், எட்டுத்தொகை, சங்க