நற்றிணை - 144. குறிஞ்சி
பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு, போது ஏர் உண் கண் கலுழவும், ஏதில் பேதை நெஞ்சம் கவலை கவற்ற ஈங்கு ஆகின்றால்- தோழி!- பகுவாய்ப் |
5 |
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை, அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக் கரை அருங் குட்டம் தமியர் நீந்தி, விரவு மலர் பொறித்த தோளர் இரவின் வருதல் அறியாதேற்கே. |
10 |
தோழீ! பிளந்த வாயையுடைய பெண் புலி இரைதேடி இயங்குகின்ற துன்பம் நீங்குதற்கரிய கவர்த்த வழியில்; விளங்கிய விரைந்த செலவையுடைய நீரோடுகின்ற கரை காண்பதரிதாகிய கான்யாற்றில் ஆழமுடைய புனலின்கண்ணே; தமியராய் நீந்தி அந் நீரிலே கலந்த மலர்கள் பொருந்திய தோளோடு; நங்காதலர் இரவில் வருதலை எண்ணி அறியாமையுடையேனாகிய எனக்கு; அந் நெறியின்கண்ணே புலி பெரிய களிற்றியானையை மோதிக் கொல்லுதலால் அதனை அறிந்த கரிய பிடியானை மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகம் முழங்குவது போன்று பிளிற்றுகின்ற ஓசையைக் கேட்டு நடுங்கி; நீலமலர் போன்ற மையுண்ட கண்கள் நீரை வடியவிடவும் யாதுமில்லாத பேதைமையுடைய என்னெஞ்சம் கவலையால் வருந்தவும்; என்னிலைமை இவ்வண்ணமா யிராநின்றது காண்!
ஆற்றது ஏதத்திற்குக்கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது. - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 144. குறிஞ்சி, இலக்கியங்கள், புலி, நற்றிணை, குறிஞ்சி, நீந்தி, அருங், எட்டுத்தொகை, கவலை, சங்க