நற்றிணை - 14. பாலை
தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய, நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்; நட்டனர், வாழி!- தோழி!- குட்டுவன் அகப்பா அழிய நூறி, செம்பியன் பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது |
5 |
அலர் எழச் சென்றனர் ஆயினும்- மலர் கவிழ்ந்து மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல், இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென, துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல் நெடு வரை விடரகத்து இயம்பும் |
10 |
கடு மான் புல்லிய காடு இறந்தோரே. |
தோழீ! மலர் தலைகவிழ்ந்து பெரிய இதழ் விரிந்த காந்தளையுடைய சாரலின் கண்ணே; தொங்குகின்ற வாயையுடைய களிற்றியானை பெரும் பாம்பின்வாய்ப் பட்டதாக; சோராத துயரோடு அஞ்சுகின்ற பிடியானை பிளிறும் பேரொலியானது; நீண்ட மலையிடத்துள்ள விடரகத்தே சென்று எதிரொலி யெடாநிற்குங் கடிய குதிரையையுடைய கள்வர் கோமான். "புல்லி" என்பவனுடைய வேங்கட மலையிலுள்ள காட்டின்கண்ணே சென்ற நங் காதலர்; என் தோளின் அழகு கெட்டு வாடிப் பழைய நலனெல்லாந் தொலையுமாறு என்னைக் கூடி இன்பங் கொடாராய்க் கைவிட்டொழிந்தாரெனக் கூறாநின்றனை!; அங்ஙனம் கைவிட்டொழிந்தாராயினும்; அவர் சேரலனது கழுமலத்தின் மதில் ஒருங்கழிய இடித்தொழித்துக் கிள்ளிவளவன் அற்றைப் பகலே அவ்வூரைத் தீயின்வாய்ப் பெய்த போரினுங்காட்டில்; மிகப் பெரிதாகிய பழிச்சொல்லுண்டாம்படி சென்றனரெனினும்; என்பால் மிக்க நட்பு வைத்தனர்; ஆதலால், குறித்த பருவத்து வந்து தலையளி செய்வர், ஆதலின் அவர் நீடு வாழ்வாராக!;
இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது. - மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 14. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, அவர், மலர், சங்க, எட்டுத்தொகை, மிகப்