நற்றிணை - 138. நெய்தல்
உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை, கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும் தண்ணம் துறைவன், முன் நாள், நம்மொடு |
5 |
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல் பூவுடன் நெறிதரு தொடலை தைஇ, கண் அறிவுடைமை அல்லது, நுண் வினை இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் முழங்கு திரை இன் சீர் தூங்கும் |
10 |
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே. |
உவர் நிலத்து விளைகின்ற குன்றுபோலும் உப்பின் குவியலை மலைநாட்டகத்தே கொண்டுபோய் விலைகூறி விற்கின்ற; ஓரிடத்திலும் நிலைத்தலில்லாத வாழ்வினையுடைய கூட்டங்கொண்ட உப்பு வாணிகர்; தங்கள் பண்டி முறிந்த விடத்திலே போகட்டொழிந்த இயல்பு அழிந்த பழைய பாரின்கண் வெளிய நாரை தன் சினையை ஈனாநிற்கும்; தண்ணிய கடலினது துறையையுடைய தலைமகன்; முன்னை நாளிலே பசிய இலையிடைநின்றும் வெளியில் வந்த திரண்ட தண்டினையுடைய நெய்தன் மலருடன்; நெறிக்கின்ற இலையை இடையிடையிட்டுத் தொடுத்த மாலையை நினக்குச்சூட்ட; அதனைக் கண்ணால் அறியக் கிடந்த தொன்றன்றி; நுண்ணிய கம்மத் தொழிலான் ஆக்கிய கலனையணிந்த அல்குலையுடைய விழாக் களத்துத் துணங்கையாடு மகளிரினுடைய; இனிய தாள அறுதி முழங்கும் கடல் ஓசை போலே பரவா நிற்கும்; ஒலியையுடைய இவ்வூர் பிறிது ஒன்றனையும் அறிந்ததில்லை; அங்ஙனமாக நீ ஆற்றாது வருந்துகின்ற தென்னையோ?
'அலர் ஆயிற்று' என ஆற்றாளாய தலைமகட்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - அம்மூவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 138. நெய்தல், நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, உப்பின், உவர், சங்க, எட்டுத்தொகை