நற்றிணை - 118. பாலை
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத் தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில், சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில் புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும், 'அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர்' என, |
5 |
இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி, புது மலர் தெருவுதொறு நுவலும் |
10 |
நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே! |
யாற்றை அடுத்த கரையின்கணுள்ள மாமரங்கள் நெருங்கிய கிளையெல்லாம் தழையும்படி தளிர் ஈன்று அழகமைந்த தண்ணிய நறிய சோலையின்கண்ணே; சேவலுடனே பொருந்திய சிவந்த கண்ணையுடைய கரிய குயில் ஒன்றனை ஒன்று விரும்பி எதிரெதிரிருந்து ஆரவாரிக்கும்; பூங்கொத்தினையுற்று மலர்கள் மலரும் இளவேனிற்காலத்தும்; முன்பு பிரிந்தகன்ற காதலர் திண்ணமாக நம்மை மறந்தனர் என வருத்தமுறுவதன் மேலும்; தம் தொழிலில் வல்ல ஓவியர் ஒள்ளிய அரக்கினையூட்டிய எழுதுகோல்போன்ற தலையில் நுண்ணிய பஞ்சினையுடைய பாதிரியின் வெளிய இதழையுடைய மலர்களை; வண்டுகள் மொய்க்கும்படி வட்டியிலேந்தி அப்புதிய மலரைத் தெருவுகள் தோறும் விலைகூறிச் செல்லாநின்ற ஏதிலாட்டியாகிய பூவிலைமடந்தையை நோக்குந்தோறும் என்னெஞ்சு நோவாநின்றது; ஆதலின் யான் இனி எவ்வண்ணம் ஆற்றியுளேனாவேன் ?
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 118. பாலை, பாலை, இலக்கியங்கள், நற்றிணை, குயில், தளிர், சங்க, எட்டுத்தொகை