குறுந்தொகை - 81. குறிஞ்சி - தோழி கூற்று
(பாங்கியின் வாயிலாகத் தலைவியோடு அளவளாவப்பெற்ற தலைவன் பிரியும் காலத்தில் அவனை நோக்கி, “நின்னுடைய குறையை நான் முடித்து வைத்தேன்; தலைவி நின்னோடு ஒன்றினள்; இனி நீ அதோ தெரியும் எம் ஊர்க்கண்ணும் வந்து பழகுவாயாக” என்று தோழி கூறியது.)
இவளே, நின்சொற் கொண்ட என்சொல் தேறிப் பசுநனை ஞாழற் பல்சினை ஒருசிறைப் புதுநலன் இழந்த புலம்புமார் உடையள் உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும் நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக் |
5 |
கடலும் கானலுந் தோன்றும் மடல்தாழ் பெண்ணையெம் சிறுநல் லூரே. |
|
- வடம வண்ணக்கண் பேரிசாத்தனார். |
வெற்ப இத்தலைவியானவள் குறையுறும் நின்சொற்களை ஏற்றுக்கொண்டு தன்னிடத்துக் கூறிய என் சொற்களை தெளிந்து பசிய அரும்புகளையுடைய ஞாழல் மரத்தினது பல கிளைகள் அடர்ந்த ஒரு பக்கத்து இதுகாறும் புதியதாக இருந்த தன் பெண்மை நலத்தை இழந்தனாலுண்டான தனிமையையுடையள்; நிலவையும் அதனோடு நின்ற இருளையும் போல புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய கடலும் அதன் கரையிலுள்ள சோலையும் கண்ணுக்குத் தோன்றுகின்ற மடல்கள் தாழ்ந்த பனைமரங்களை யுடைய எமது சிறிய நல்ல ஊர் அதோ பார்; இனி எம்மை மறவாது நினைக்க வேண்டும்.
முடிபு: இவள் நலன் இழந்த புலம்புடையாள்; எம் சிறு நல்லூர் உதுக்காண்; உள்ளல் வேண்டும்.
கருத்து: இனி எம்மை மறவாது எம்மூருக்கு வந்து பழக வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 81. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, வேண்டும், குறுந்தொகை, குறிஞ்சி, கூற்று, கடலும், மறவாது, உள்ளல், எம்மை, வந்து, எட்டுத்தொகை, சங்க, இழந்த, உதுக்காண்