குறுந்தொகை - 363. பாலை - தோழி கூற்று
(தலைவனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி, “இனியளாகிய தலைவியைப் பிரிந்து செல்லுதல் இன்னாமையைத் தருவது” என்று அவனுக்குக் கூறியது.)
கண்ணி மருப்பின் அண்ணநல் லேறு செங்கோற் பதவின் வார்குரல் கறிக்கும் மடக்கண் மரையா நோக்கிவெய் துற்றுப் புல்லரை உகாஅய் வரிநிழல் வதியும் இன்னா அருஞ்சுரம் இறத்தல் |
5 |
இனிதோ பெரும இன்றுணைப் பிரிந்தே. | |
- செல்லூர்க் கொற்றனார். |
பெரும! இனிய துணைவியைப் பிரிந்து கண்ணியை அணிந்த கொம்பையுடைய தலைமையை யுடைய நல்ல மலை எருது செவ்விய தண்டுகளையுடைய அறுகினது நீண்ட கொத்தைக் கடித்துத் தின்னும் மடப்பம் பொருந்திய கண்ணையுடைய மலைப் பசுவைப் பார்த்து பெருமூச்சுவிட்டு புல்லிய அடியையுடைய உகாஅய் மரத்தினது புள்ளிகளையுடைய நிழலின் கண்ணே தங்குகின்ற இன்னாத கடத்தற்கரிய சுரத்தைக் கடத்தல் இனிமையையுடையதோ?
முடிபு: பெரும, துணைப்பிரிந்து சுரம் இறத்தல் இனிதோ?
கருத்து: தலைவியைப் பிரிந்து செல்லுதல் இன்னாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 363. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, பாலை, பெரும, குறுந்தொகை, பிரிந்து, இறத்தல், இனிதோ, உகாஅய், தலைவியைப், எட்டுத்தொகை, சங்க, செல்லுதல்