குறுந்தொகை - 282. பாலை - தோழி கூற்று
(தலைவன் வினைவயிற் பிரிந்த காலத்தில் அவன் கூறிய கார்ப்பருவம் வந்ததாக, "இப் பருவத்தின் அடையாளங்களைத் தாம் சென்ற இடத்தே கண்டு இனி நீ ஆற்றாய் என்பதறிந்து தலைவர் மீண்டு வருவார்" என்று தோழி தலைவிக்குக் கூறியது.)
செவ்விகொள் வரகின் செஞ்சுவற் கலித்த கௌவை நாற்றின் காரிரு ளோரிலை நவ்வி நாண்மறி கவ்விக் கடன்கழிக்கும் காரெதிர் தண்புனங் காணிற் கைவளை நீர்திகழ் சிலம்பின் ஓராங் கவிழ்ந்த |
5 |
வெண்கூ தாளத் தந்தூம்பு புதுமலர் ஆர்கழல் புகுவ போலச் சோர்குவ வல்ல என்பர்கொல் நமரே. |
|
- நாகம் போத்தனார். |
நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் செம்மண்ணை உடைய மேட்டின் மேல் தழைத்த பருவம் வாய்த்த வரகினது காற்றால் ஒலித்தலை உடைய நாற்றினது மிக்க கறுப்பை உடைய ஓர் இலையை நாட்காலத்தே வந்த மான்குட்டி கவ்வி! தின்னலென்னும் கடனைத் தீர்த்துக் கொள்ளுதற்கிடமாகிய கார்காலத்தை ஏற்றுக் கொண்ட தண்ணிய கொல்லையை காண்பாராயின் நீர் விளங்குகின்ற மலைப் பக்கத்தில் ஒரு படித்தாக மலர்ந்த வெள்ளிய கூதாளத்தின் உட்டுளையை உடைய அழகிய புதிய மலர்கள் காம்பில் கழன்று உதிர்தலைப் போல நின் கை வளைகள் சோர்ந்து வீழ்வன அல்ல என்று எண்ணுவாரோ? எண்ணார்.
முடிபு: அவர் புனம் காணின், வளை சோர்குவ அல்ல என்பர்கொல்?
கருத்து: தாம் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததறிந்து தலைவர் விரைவில் வருவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 282. பாலை - தோழி கூற்று, இலக்கியங்கள், உடைய, தோழி, சென்ற, தலைவர், பாலை, கூற்று, குறுந்தொகை, அல்ல, என்பர்கொல், சோர்குவ, கார்ப்பருவம், எட்டுத்தொகை, சங்க, தாம்