குறுந்தொகை - 264. குறிஞ்சி - தலைவி கூற்று
தலைவனது பிரிவால் தலைவியினது மேனியின் நிறம் வேறுபடுதலைக் கண்டு கவன்ற தோழியை நோக்கி, "யான் அவர் கேண்மையின் உறுதியை அறிவேனாதலின் ஆற்றுவேன்" என்று தலைவி கூறியது.)
கலிமழை கெழீஇய கான்யாற் றிகுகரை ஒலிநெடும் பீலி துயில்வர இயலி ஆடுமயி லகவும் நாடன் நம்மொடு நயந்தனன் கொண்ட கேண்மை பயந்தக் காலும் பயப்பொல் லாதே. |
5 |
- கபிலர். |
தோழி! ஆரவாரத்தை உடைய மழை பொருந்திய காட்டாற்றினது தாழ்ந்த கரையினிடத்து தழைத்த நெடிய தோகை அசைய நடந்து ஆடுகின்ற மயில்கள் கூவும் நாடன் நம்மோடு விரும்பி உண்டாக்கிக் கொண்டநட்பானது நாம் பசலையை அடைந்தாலும் அப் பசலையொடு பொருந்தாது.
முடிபு: நாடன் கொண்ட கேண்மை பயந்தக்காலும் பயப்பு ஒல்லாது.
கருத்து: என் மேனியில் வேறுபாடு உண்டாயினும் என் நெஞ்சம் அவர் செய்த நட்பில் உறுதி உடையதாகையால் ஆற்றுவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 264. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நாடன், கொண்ட, கேண்மை, சங்க, எட்டுத்தொகை, அவர், ஆற்றுவேன்