குறுந்தொகை - 256. பாலை - தலைவன் கூற்று
(பொருள்வயிற் பிரிய எண்ணிய தலைவன் தன் கருத்தைத் தலைவிக்கு உணர்த்த, அவள் வெய்துற்று அழுதாளாக, அது கண்ட தலைவன் செலவு தவிர்ந்து கூறியது.)
மணிவார்ந் தன்ன மாக்கொடி யறுகை பிணிகான் மென்கொம்பு பிணையொடு மார்ந்த மானே றுகளுங் கானம் பிற்பட வினைநலம் படீஇ வருது மவ்வரைத் தாங்கல் ஒல்லுமோ பூங்குழை யோயெனச் |
5 |
சொல்லா முன்னர் நில்லா வாகி நீர்விலங் கழுத லானா தேர்விலங் கினவால் தெரிவை கண்ணே. |
|
- ..... |
பொலிவை உடைய குழையை அணிந்தோய் நீல மணி ஒழுகினாற் போன்ற கரிய கொடியாகிய அறுகினது பிணிப்பு நீங்கிய மெல்லிய தண்டை பெண் மானோடு வயிறு நிரம்ப உண்ட ஆண் மான் துள்ளுகின்ற காடு பின்னாகச் சென்று தொழில் நன்மை உண்டாகப் பெற்று மீண்டு வருவேம்; அக்காலத்தளவும் நின்னாற் பொறுத்திருத்தல் இயலுமோ? என்று நாம் சொல்லாமைக்கு முன்னமே தலைவியின் கண்கள் பழைய நிலையில் நில்லாமல் கலங்கி நீரால் மாறுபடுதலை உடைய அழுகை அமையாவாகி எம் தேரைத் தடை செய்தன.
முடிபு: ‘பூங்குழையோய், கானம் பிற்பட வினைநலம் படீஇ வருதும்; தாங்கல் ஒல்லுமோ? எனச் சொல்லா முன்னர், தெரிவை கண்அழுதல் ஆனாவாகித் தேரை விலங்கின.
கருத்து: தலைவி என் பொருட்பிரிவுக்கு உடம்படாமையின் யான் செல்லேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 256. பாலை - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கூற்று, சொல்லா, ஒல்லுமோ, தெரிவை, உடைய, தாங்கல், முன்னர், பிற்பட, எட்டுத்தொகை, சங்க, கானம், வினைநலம், படீஇ