குறுந்தொகை - 239. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் சிறைப்புறமாக இருக்கையில் தலைவி தோழிக்குக் கூறுவாளாய், ‘‘என் தோள்கள் நெகிழ்ந்தன; நாணமும் அகன்றது’’ என்று கூறி வரைவு கடாயது.)
தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினவே விடுநாண் உண்டோ தோழி விடர்முகைச் சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள் நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி பாம்புமிழ் மணியின் தோன்றும் |
5 |
முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே. | |
- ஆசிரியர் பெருங்கண்ணனார். |
தோழி! பிளப்பையும் முழைகளையும் உடைய பக்கமலை முழுவதும் மணம் வீசும் அசைகின்ற கொத்துக்களில் உள்ள காந்தட் பூவின் நறிய தாதை ஊதுகின்ற தும்பி என்னும் வண்டு பாம்பினால் உமிழப்படும் மணியைப் போலத் தோன்றுகின்ற மூங்கிலை வேலியாக உடைய மலைகளை உடைய தலைவன் பொருட்டு என் வளைகள் நழுவின; என் தோள்கள் மெலிந்தன; இனி விடுவதற்குரிய நாணம் உள்ளதோ? அது முன்னரே ஒழிந்தது.
முடிபு: தோழி, மலைகிழவோற்குத் தொடி ஞெகிழ்ந்தன; தோள் சாயின; விடு நாண் உண்டோ?
கருத்து: என் நிலை அறிந்து தலைவன் விரைவில் வரைந்துகொள்ள வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 239. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, தோழி, உடைய, குறிஞ்சி, தலைவன், குறுந்தொகை, தும்பி, எட்டுத்தொகை, உண்டோ, தோள்கள், சங்க