குறுந்தொகை - 202. மருதம் - தலைவி கூற்று
(பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்குத் தூதாகவந்த தோழியைநோக்கி, “தலைவர் இப்பொழுது எனக்கு இன்னாமையைத் தரும்ஒழுக்கத்தினராதலின் என் நெஞ்சு வருந்தும்; அவரை ஏற்றுக் கொள்ளேன்” என்று தலைவி கூறியது.)
நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங் கினிய செய்தநங் காதலர் இன்னா செய்தல் நோமென் னெஞ்சே. |
5 |
- அள்ளூர் நன்முல்லையார். |
தோழி! என் நெஞ்சுவருந்தும்; முல்லைநிலத்தின் கண் நெருங்கி முளைத்த சிறிய இலைகளையுடைய நெருஞ்சியினது முன்னர்த் தோன்றிக் கண்ணுக்குஇனிய புதியமலர் பின்னர் இன்னாமையைத்தரும் முள்ளைத் தந்தாற்போல முன்பு நமக்கு இனியவற்றைச் செய்தொழுகியநம் தலைவர் இப்பொழுது இன்னாதனவற்றைச் செய்தொழுகு தலால் என் நெஞ்சு நோம்!.
முடிபு: என் நெஞ்சு நோம்; என் நெஞ்சு நோம்; நம் காதலர்இன்னா செய்தலால் என் நெஞ்சு நோம்.
கருத்து: தலைவர் இன்னாராகி ஒழுகுதலால் என் நெஞ்சம் வருந்தும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 202. மருதம் - தலைவி கூற்று, நெஞ்சு, நோம், இலக்கியங்கள், தலைவி, நோமென், னெஞ்சே, குறுந்தொகை, கூற்று, மருதம், எட்டுத்தொகை, தலைவர், சங்க, இப்பொழுது, வருந்தும்