குறுந்தொகை - 173. குறிஞ்சி - தலைவன் கூற்று
(பாங்கியிற் கூட்டத்தின்கண் தலைவன் தோழியிடம் குறையிரப்ப அவள் மறுத்தாளாக, “இனி மடலேறும் பரிகார மொன்று இருத்தலால், அது செய்ய நினைந்து நான் செல்கின்றேன்” என்று அவன் கூறியது.)
பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப் பூண்மணி கறங்க வேறி நாணட் டழிபடர் உண்ணோய் வழிவழி சிறப்ப இன்னள் செய்த திதுவென முன்னின் |
5 |
றவள் பழி நுவலு மிவ்வூர் ஆங்குணர்ந் தமையினீங் கேகுமா றுளெனே. |
|
- மதுரைக் காஞ்சிப்புலவன். |
பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருங்கக்கட்டிய பலவாகிய நூல்களையுடைய மாலைகளை அணிந்த பனங்கருக்கால் உண்டாக்கப்பட்ட மனச் செருக்கையுடைய குதிரையை அதன் கழுத்திற் பூட்டிய மணி ஒலிக்கும்படி ஊர்ந்து நாணத்தைத் தொலைத்து மிக்க நினைவையுடைய உள்ளத்தேயுள்ள காமநோய் மேலும் மேலும் மிகுதியாக இன்னாளால் உண்டாக்கப்பட்டது இக்காம நோயென்று யான் கூற அக்கோலத்தைக் கண்ட இவ்வூரி லுள்ளார் எல்லோர்க்கும் முன்னே நின்று தலைவியினது பழியைக் கூறுவர். அங்ஙனம் உள்ளதொரு பரிகாரத்தை அறிந்திருத்தலால் இவ்விடத் தினின்றும் போகும் பொருட்டு உள்ளேன்.
முடிபு: கலிமா ஏறி நாண் அட்டு நோய் சிறப்ப இன்னள் செய்தது இதுவென, இவ்வூர் அவள் பழி நுவலும்; ஆங்கு உணர்ந்தமையின் ஏகுமாருளென்.
கருத்து: நான் இனி மடலேறுவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 173. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, இன்னள், சிறப்ப, மேலும், சங்க, எட்டுத்தொகை, அவள், நான்