குறுந்தொகை - 171. மருதம் - தலைவி கூற்று
(தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்த காலத்தில் அயலார் வரையப் புக்கனராக, அதுகண்டு கவன்ற தோழிக்கு, “இவர்கள் செய்யும் முயற்சி பயன்படாதொழியும்” எனத் தலைவி கூறியது.)
| காணினி வாழி தோழி யாணர்க் கடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட மீன்வலை மாப்பட் டாஅங் கிதுமற் றெவனோ நொதுமலர் தலையே. |
|
| - பூங்கணுத்திரையார். |
தோழி! இப்பொழுது பார்ப்பாயாக; புதுவருவாயாகிய மிக்க புனலையும் அடைந்த கரையையுமுடைய ஆழமான குளத்தின்கண் அமைத்த மீனுக்குரிய வலையின்கண் விலங்கு அகப்பட்டாற் போல அயலாரிடத்து வரைவுக்குரிய இம் முயற்சி என்ன பயனுடைத்து?
முடிபு: தோழி, காண்; நொது மலர்தலை இது எவன்?
கருத்து: அயலார் வரைவுமேற்கொள்வதனாற் பயனொன்று மில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 171. மருதம் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, தோழி, மருதம், குறுந்தொகை, கூற்று, முயற்சி, எட்டுத்தொகை, சங்க, அயலார்