குறுந்தொகை - 138. மருதம் - தோழி கூற்று
(முதல்நாள் உரிய இடத்தே வந்து தலைவியைக் காணாத தலைவன் மறுநாள் கேட்கும் அணிமையில் நிற்பதை அறிந்த தோழி, “நேற்றிரவு தலைவரது வரவை எதிர்நோக்கித் துயிலாமல் இருந்தேம்; அவர் வந்திலர்” எனக் கூறியது.)
கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே எம்மி லயல தேழி லும்பர் மயிலடி யிலைய மாக்குர னொச்சி அணிமிகு மென்கொம் பூழ்த்த மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே. |
5 |
- கொல்லன் அழிசி. |
எமது வீட்டின் அயலதாகிய ஏழிற்குன்றத்தின் மேலுள்ள மயிலின் அடியைப் போன்ற இலையையுடைய கரிய பூங்கொத்தையுடைய நொச்சியினது அழகு மிக்க மெல்லிய கொம்புகள் உதிர்த்த நீலமணி போன்ற மலர்களின் ஓசையை மிகக் கேட்டு பெரிய ஊரிலுள்ளார் துயின்றாலும் நாங்கள் துஞ்சேமாயினேம்.
முடிபு: ஊர் துஞ்சினும், யாம் பூவின்பாடு கேட்டுத் துஞ்சலம்.
கருத்து: நேற்றுத் தலைவரை யாம் எதிர் நோக்கியிருந்தேம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 138. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, மருதம், குறுந்தொகை, கூற்று, யாம், துஞ்சினும், எட்டுத்தொகை, சங்க