குறுந்தொகை - 123. நெய்தல் - தோழி கூற்று
(தலைவன் பகலில் வந்து மறைந்து நிற்க, “தலைவர் இன்னும் பாணிப்பாராயின் நம் தமையன்மார் மீன்வேட்டையினின்றும் திரும்பி வருவாராதலின் அவர் நம்மைக் காண்டலரிது; இப்பொழுதே வருவாராயின் நன்றாகும்” என்னும் கருத்துத் தோன்றத் தோழி தலைவிக்குக் கூறியது.)
இருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல் நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறைக் கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப இன்னும் வாரார் வரூஉம் பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே. |
5 |
- ஐயூர் முடவனார். |
தோழி! நிலவைத் தொகுத்தாற்போன்ற தோற்றத்தை யுடைய வெள்ளிய மணற்பரப்பின் ஒரு பக்கத்தில் உள்ள இருள் செறிந்தாற் போன்ற ஈரமும் குளிர்ச்சியுமுடைய கொழுவிய நிழலையுடைய கரிய கிளைகளையுடைய புன்னை மரங்கள் அடர்ந்த பூஞ்சோலை தனிமைப் பட்டிருப்ப தலைவர் இன்னும் வந்தாரிலர்; பல வகை மீன்களை வேட்டையாடுதலையுடைய தமையன்மார் ஏறிச் சென்ற மீன் படகுகள் மீண்டு வரும்.
முடிபு: பொழில் புலம்ப, இன்னும் வாரார்; என்னையர் திமில் வரூஉம்.
கருத்து: தலைவர் இப்பொழுதே வருதல் நலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 123. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், இன்னும், குறுந்தொகை, நெய்தல், கூற்று, வாரார், தலைவர், வரூஉம், புலம்ப, தமையன்மார், எட்டுத்தொகை, சங்க, இப்பொழுதே, தன்ன