குறுந்தொகை - 109. நெய்தல் - தோழி கூற்று
(தலைவன் கேட்கும் அண்மையனாக இருக்கையில் தலைவிக்குக் கூறுபவளாய், “தலைவர் நாடோறும் வந்து பயின்று செல்லும் இக்காலத்தில் நின் நுதற்கவின் மாறியது என்?” என்று தோழி, அவனுக்கு வரைய வேண்டியதன் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)
முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை புணரி இகுதிரை தரூஉந் துறைவன் புணரிய இருந்த ஞான்றும் இன்னது மன்னோ நன்னுதற் கவினே. |
|
- நம்பி குட்டுவனார். |
வளைவையுடைய காலையுடைய இறாமீனின் வளைந்த முதுகையுடைய பெரிய இனத்தை கடலில் தாழும் அலையானது கொண்டு வந்து தருதற்கு இடமாகிய துறையையுடைய தலைவன் அளவளாவ இருந்தபொழுதும் நினது நல்ல நெற்றியின் அழகு பிறர் அலர் கூறும் குறைபாட்டையுடைய இத்தகையதாயிற்று; இஃது இரங்கற்குரியது!
முடிபு: துறைவன் புணரிய இருந்த ஞான்றும் நன்னுதற் கவின் இன்னது மன்.
கருத்து: தலைவன் வரைந்தாலன்றி நின் வேறுபாடு நீங்காது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 109. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, நெய்தல், தலைவன், குறுந்தொகை, கூற்று, இருந்த, ஞான்றும், இன்னது, புணரிய, நன்னுதற், நின், சங்க, வந்து, எட்டுத்தொகை, துறைவன்