அகநானூறு - 381. பாலை
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல் மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப, ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும் அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப, அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் |
5 |
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை, கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர் வில் சினம் தணிந்த வெருவரு கவலை, குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி, |
10 |
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து, செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும் அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார் முனை அரண் கடந்த வினை வல் தானை, தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய |
15 |
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல, பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது உயிர்த்து, வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண, நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை எதிர் மலர் இணைப் போது அன்ன, தன் |
20 |
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே! |
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை இளங்கௌசிகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 381. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க