அகநானூறு - 293. பாலை
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை வலை வலந்தனைய ஆக, பல உடன் சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின், துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி, |
5 |
குயிற் கண் அன்ன குரூஉக் காய் முற்றி, மணிக் காசு அன்ன மால் நிற இருங் கனி, உகாஅய் மென் சினை உதிர்வன கழியும் வேனில் வெஞ் சுரம் தமியர் தாமே, செல்ப என்ப தோழி! யாமே, |
10 |
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து, இன்னா மொழிதும் என்ப; என் மயங்கினர்கொல், நம் காதலோரே? |
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் குறிப்பு அறிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம். - காவன்முல்லைப் பூதனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 293. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, தோழி, நொந்து, என்ப, அன்ன, எட்டுத்தொகை, சங்க