அகநானூறு - 269. பாலை
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க! நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக! ஏறுடை இன நிரை பெயர, பெயராது, செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய தறுகணாளர் நல் இசை நிறுமார், |
5 |
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின், நட்ட போலும் நடாஅ நெடுங் கல் அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி, நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் |
10 |
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால் இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர், தைஇ நின்ற தண் பெயல் கடை நாள், பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் |
15 |
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர, பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து வயிர் இடைப்பட்ட தௌ விளி இயம்ப, வண்டற் பாவை உண்துறைத் தரீஇ, திரு நுதல் மகளிர் குரவை அயரும் |
20 |
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை, வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின் யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த ஒண் செங் கழுநீர் அன்ன, நின் கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே. |
25 |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 269. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, வாய், எட்டுத்தொகை, சங்க