அகநானூறு - 24. முல்லை
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன, தளை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை, சிதரல் அம் துவலை தூவலின், மலரும் தைஇ நின்ற தண் பெயல் கடைநாள், |
5 |
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை, விசும்பு உரிவதுபோல், வியல் இடத்து ஒழுகி, மங்குல் மா மழை, தென் புலம் படரும் பனி இருங் கங்குலும் தமியள் நீந்தி, தம் ஊரோளே, நன்னுதல்; யாமே, |
10 |
கடி மதில் கதவம் பாய்தலின், தொடி பிளந்து, நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு, சிறு கண் யானை நெடு நா ஒண் மணி, கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு, தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து, |
15 |
கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த் தோள், இரவுத் துயில் மடிந்த தானை, உரவுச் சின வேந்தன் பாசறையேமே. |
தலைமகன் பருவங் கண்டு சொல்லியது. வினைமுற்றும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - ஆவூர் மூலங் கிழார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 24. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, தலைமகன், எட்டுத்தொகை, சங்க